அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போது திடீரென உரியிரிழந்த பெண்ணின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கைகுறிச்சி கிராமத்தில் வீரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு முத்துக்குமார் என்ற கணவன் உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணி குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்நிலையில் ராணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு ராணியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் கருத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் புதுக்கோட்டை மகப்பேறு மருத்துவமனையில் ராணியை அறுவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு ராணி திடீரென உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அவரது உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராணியின் உறவினர்கள் மருத்துவர்களின் கவனக்குறைவால் தான் அவர் இறந்து விட்டார் என கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராணியின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பிறகு பிரேத பரிசோதனைக்காக ராணியின் உடலானது புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராணியின் உறவினர்கள் அளித்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.