17 வயது சிறுவனை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வருகின்றார். இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு 17 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளில் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. கடந்த 26-ஆம் தேதி இந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக சிறுவன் வீட்டை விட்டு வெளியேறி விட்டான். இதற்கிடையில் தங்களது மகனை காணவில்லை என சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண் சிறுவனை அழைத்து சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது திருமணம் செய்து கொண்டு இளம்பெண் அந்த சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளது. அதன்பின் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.