தமிழகத்தில் ஊரடங்கை நீடித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள முழு அறிக்கையின் சாராம்சம் :
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் கடந்த 24.03.2020 அன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு அதனை 15.04.2020 அன்று காலை வரை நீடித்தது. உலக ஊரடங்கு உத்தரவை தீவிரமாக கடைபிடித்து வந்ததன் காரணமாக தமிழ்நாட்டில் நோய் தொற்று பெருமளவில் பரவாது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பு தொடர்பாகவும், கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மாநிலங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளையும், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக 11.04.2020 அன்று கலந்தாய்வு மேற்கொண்டார். இந்த கலந்தாய்வின் போது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும், தமிழ்நாடு போதிய போதிய நிதி வழங்க வேண்டும் எனவும், பாரத பிரதமர் அவர்களிடம் நான் எடுத்துரைத்தேன். மேலும் 30.04.2020 வரை ஊரடங்கு உத்தரவினை நீட்டிக்க வேண்டும் என்ற என்னுடைய கருத்தை தெரிவித்தேன். நானும் மற்ற முதலமைச்சர்களும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தின் நடவடிக்கைகளின் அடிப்படையிலும், உலக சுகாதார அமைப்பின் கருத்தின் படியும், மருத்துவ நிபுணர் குழு மற்றும் பொது சுகாதார வல்லுநர் குழுக்களின் பரிந்துரைகளின் படியும், மாநிலத்தில் ஊரடங்கை தளர்த்தினால், நோய்த் தொற்று அதிகரிக்கக் கூடும் என்பதை கருத்தில் கொண்டும், 11.04.2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் படியும், குற்றவியல் விசாரணை முறை சட்டப் பிரிவு 144ன் படியும், 30.04.2020 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.
கொரோனா நோய்த் தொற்றினை தடுக்கும் நோக்கில், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் படியும், குற்றவியல் விசாரணை முறை சட்டப் பிரிவு 144ன் படியும், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அனைத்துக் கட்டுப்பாடுகளும் தொடங்கும்.
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் காரணத்தினால், தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை ஒரு கிலோ துவரம் பருப்பு ஒரு கிலோ சமையல் எண்ணெய் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்போதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாயவிலை கடைகளில் விலை இன்றி வழங்கப்படும்.
கட்டட தொழிலாளர்கள் உட்பட பதிவு செய்யப்பட்ட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும், குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும்.
பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கான 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலை இன்றி வழங்கப்படும்.
பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து, தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலான காலத்தில் பேக்கரி இயங்க தடை இல்லை என்பதையும், ஏற்கனவே உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி பேக்கரிகளில் பார்சல் விற்பனை மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் தெளிவுபடுத்தபடுகின்றது.
மேலும், சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மக்கள், கொரோனா நோய் தொடர்பான தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள டெலி மெடிசன் சொசைட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் பதிவு பெற்ற சிறந்த மருத்துவர்களைக் கொண்டு, தொலை மருத்துவ முறை மூலம் தங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு தெளிவு பெற தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாக இருப்பது தான் மாண்புமிகு அம்மாவின் அரசுக்கு மிகவும் முக்கியமானது.
ஆகவே தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட அனைத்து விதிமுறைகளையும், தவறாமல் பின்பற்றி விழித்தெழுங்கள், விலகி இருங்கள், வீட்டில் இருங்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சமூக இடைவெளியை கடைபிடித்து, கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.