உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து 8 மாதங்களாக நீடித்துக் கொண்டு வருகின்றது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து 8 மாதங்களாக நீடித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பக்கபலமாக இருந்து வருகின்றது. இதனை கடுமையாக எதிர்த்து வரும் ரஷ்ய அதிபர் புதின், போரில் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து தலையிட்டால் அணு ஆயுத போரை நடத்த தயங்க மாட்டோம் என்று அண்மையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 1962-ஆம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்கா மிகப் பெரிய அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மான்ஹாட்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜோ பைடன் கூறியதாவது, “உக்ரைன் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்துவேன் என்று ரஷ்ய அதிபர் புதின் சொல்வதை வெறும் நகைச்சுவையாக கடந்துவிட முடியாது. கடந்த 1962-ல் கியூபாவில் அணுசக்தி ஏவுகணைகளை நிறுத்தி சோவியத் யூனியன் அச்சுறுத்தியது. அதற்கு பிறகு தற்போது அமெரிக்கா மிகப்பெரிய அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார். மேலும் உக்ரைனில் ரஷ்ய படைகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்றால் ஆத்திரத்தில் புதின் அணு ஆயுதம் அல்லது உயிரி ஆயுதம் அல்லது ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடிய சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.