குப்பையில் தவறவிட்ட ஒரு பவுன் மோதிரத்தை மீட்டுக்கொடுத்த பெண் தூய்மைப் பணியாளரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் அசோக் நகரைச் சேர்ந்தவர் முத்து – அனந்தலட்சுமி தம்பதியினர். இவர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர் பாக்கியம் என்பவரிடம் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள குப்பைகளோடு பூஜை அறையில் இருந்த பழைய பூக்களையும் அளித்துள்ளார். பின்னர் பூஜை அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் மோதிரம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பழைய பூக்களோடு மோதிரமும் குப்பையில் சென்று இருக்கலாம் என கருதி அனந்தலட்சுமி பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு செயல் அலுவலர் சிவலிங்கத்திடம் மோதிரம் தவற விட்டதை பற்றி கூறியுள்ளார். இதனை அடுத்து குப்பைகளை தரம் பிரிக்கும் இடமான வளர் மீட்பு பூங்காவிற்கு அலுவலர்கள் சென்று தூய்மை பணியாளர் பாக்கியம் கொண்டுவந்த குப்பைகளை சோதனை செய்து பார்த்ததில் அதில் மோதிரம் இருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து செயல் அலுவலர் சிவலிங்கம் மோதிரத்தை தவறவிட்ட அனந்தலட்சுமியிடம் அதை ஒப்படைத்தார். மேலும் குப்பையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மோதிரத்தை தேடி எடுத்து கொடுத்த தூய்மைப் பணியாளர் பாக்கியத்தை பொதுமக்களும் பணியாளர்களும் பாராட்டியுள்ளனர்.