தாய்லாந்தில் கே-9 என்ற ரோபோ நாய் மூலம், வரும் வாடிக்கையாளர்களின் கைகளை நன்றாக சுத்தம் செய்ய சானிடைசர் திரவம் வழங்கப்படுகிறது.
உலகளவில் கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தாய்லாந்து நாட்டை பொறுத்த வரையில் கொரோனா கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அந்நாட்டில் 3,000-த்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் பரவியதில் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பாங்காக் நகரிலுள்ள ‘சென்ட்ரல் வேர்ல்ட் மால்’ என்ற புகழ்பெற்ற வணிக வளாகத்தில், அங்கு வருகின்ற வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கு புதுமையான தடுப்பு முறையை கையாண்டு வருகின்றனர்.
இங்கு கே-9 என்ற ரோபோ நாய் (K9 robot dog) மூலம், வருகின்ற வாடிக்கையாளர்களின் கைகளை நன்றாக சுத்தம் செய்து கொள்வதற்கு சானிடைசர் திரவம் கொடுக்கப்படுகிறது.

இந்த ரோபோ நாய் ஒரு அசல் நாயை போலவே சுறுசுறுப்புடன் வலம் வந்து, உற்சாகத்துடன் அங்கு வருகின்ற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கவனத்தையும் கவரும் விதமாக அமைந்துள்ளது. இந்த ரோபோ நாய் 5-ஜி தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்றது.
“இது, மக்கள் ஒவ்வொருவரும் தங்களது கைகளை சானிடைசர் திரவம் கொண்டு நன்றாக சுத்தம் செய்து விட்டு, பொருட்களை பார்த்து தெரிவு செய்வதற்கு மிகவும் வசதியாக உள்ளது. குறிப்பாக தற்போது கொரோனா தொற்று பரவி வருகின்ற இந்த காலகட்டத்தில் அதனைத தடுப்பதற்கு உதவும்” என்று பெட்ரா சக்திதேஜ்பானுபவந்த் என்பவர் கூறியுள்ளார். மேலும் இந்த ரோபோ நாய் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதாக மக்கள் நினைகின்றனர் என்று குறிப்பிட்டார்.