ஆங்கில மருத்துவத்துடன் ஆயுஷை இணைக்க கடும் எதிர்ப்பு நிலவி வருகின்றது.
ஆங்கில மருத்துவத்தையும் – ஆயுஷ் மருத்துவ முறைகளையும் ஒன்றாக இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு டாக்டர்கள் பெருமளவில் மனு அளிக்கும் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி ஆகியவை ஆயுஷ் மருத்துவ முறைகள் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவற்றை அலோபதி மருத்துவத்துடன் இணைப்பது மற்றும் ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
இதற்கு நாடு முழுதும் அலோபதி டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்திப் பல்வேறு கட்ட போராட்டங்களில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இம்மாதம் 1ம் தேதி முதல் 14 வரை தமிழகத்தில் எட்டு இடங்கள் உட்பட நாடு முழுதும் 50 இடங்களில் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல கட்ட போராட்டங்கள் நடந்தும் மத்திய அரசிடமிருந்து எந்தப் பதிலும் இல்லையென இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெயலால் கூறினார். அடுத்தகட்டமாகப் பிரதமர் மோடிக்கு பெருந்திரள் மனு அனுப்பும் போராட்டத்தில் டாக்டர்கள் ஈடுபட்டு உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சங்க கிளை டாக்டர்களிடம் மனுக்களைப் பெற்று பிரதமருக்கு அனுப்பப்படுகிறது. அடுத்தகட்டமாகப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.