மத்திய அரசின் நுகர்வோர் விவகாரப் பிரிவு செயலாளர் ரோஹித் சிங் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, இந்தியாவில் பருப்பு உள்ளிட்ட தானியங்களின் கையிருப்பு போதுமான அளவில் இருக்கிறது. இதனால் பருப்பு உள்ளிட்ட தானியங்களின் விலை தற்போதைக்கு உயர வாய்ப்பு இல்லை. மத்திய அரசிடம் 2 லட்சத்து 50,000 டன் வெங்காயம் இருப்பு இருக்கிறது. தற்போது சில மாநிலங்களில் வெங்காயம் விலை உயர்ந்ததாக தகவல் வெளியான நிலையில், அந்த மாநிலங்களுக்கு வெங்காயம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 2 கோடியே 72 லட்சம் டன் பருப்பு வகைகள் பயன்படுத்தப்படும் நிலையில், உள்நாட்டில் 2 கோடியே 50 லட்சம் டன் பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் மீதி தேவைக்கு தான் நாம் இறக்குமதி செய்கிறோம். தற்போது 43 லட்சம் டன் பருப்பு இருப்பில் இருக்கிறது. மேலும் இப்போதைக்கு தேவை ஏற்படாத நிலையில் தேவைப்பட்டால் கொள்முதல் செய்யவும் தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.