குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை மனைவி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பழுக்காடு கிராமத்தில் தங்கவேல் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு கருப்பாயி என்ற மனைவியும், இளங்கோ என்ற மகனும் உள்ளனர். இவருடைய மகனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குடும்பத்தாருடன் தனியாக வசித்து வருகிறார். எனவே தங்கவேல் மற்றும் கருப்பாயி ஆகிய இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதற்கிடையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தங்கவேல் மது அருந்திவிட்டு மனைவியிடம் சண்டை போட்டுள்ளார்.
அப்போது கோபமடைந்த கருப்பாயி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அவரது கணவனின் தலையின் பின்புறமும், கால் பகுதியிலும் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து பேராவூரணி போலீசாருக்கு கிராம நிர்வாக விக்னேஷ் ஷர்மா தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தங்கவேலின் உடலை கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் பேராவூரணி போலீசார் கருப்பாய் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.