தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு பணிகள் மேற்கொண்ட போது சமூக இடைவெளி இல்லாமல் திருமணம் நடத்தியதற்கு மணமக்கள் குடும்பத்தினரிடம் அபராதம் வசூலித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் அங்கன்வாடி மையம் கட்டுதல், நாடகமேடை கட்டுதல், பயணிகள் நிழற்குடை அமைத்தல், தார்சாலை பலப்படுத்துதல், நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுதல், வரத்து வாய்க்கால்களை மேம்படுத்துதல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுதல்,கழிப்பிடம் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நடந்து வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேற்று முன்தினம் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
இதனையடுத்து மொட்டனூத்து கிராமத்தில் நடைபெறும் காய்ச்சல் கண்டறியும் முகாமையும், ரேஷன் கடையில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் பணியையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஒக்கரைப்பட்டியில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளும்போது அப்பகுதியில் ஒரு வீட்டில் திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அங்கு வந்தவர்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்துள்ளனர்.
மேலும் திருமணம் நடத்துபர்களிடம் அபராதம் வசூலிக்குமாறு ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அண்ணாதுரைக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் மணமக்களின் பெற்றோரிடம் 5,000 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுபாஷ்சந்திரபோஸ், ஞானதிருப்பதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி மற்றும் அலுவலர்கள் என பலரும் ஆய்வில் பங்கேற்றுள்ளனர்.