சென்னையில் இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர்கள் சந்தோஷ்குமார்-கவிதா தம்பதியினர். இவர்களுக்கு ஐந்து வயது ஆண் குழந்தையும், இரண்டு வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சந்தோஷ் குமார் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அவரது மனைவி வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் அவரது இரண்டு குழந்தைகளும் வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரம் கழித்து கவிதா வெளியில் வந்து குழந்தைகளை பார்த்தபோது அவரது மகன் மட்டும்தான் இருந்துள்ளார். தன் மகள் தர்ஷினி காணவில்லை என்று பதற்றம் அடைந்த கவிதா அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. அதன்பின் அவர்களது வீட்டில் அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை மயக்க நிலையில் மிதந்து இருந்ததை கண்டனர்.
அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதன்பின் இச்சம்பவம் குறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.