சூர்யாவின் 2டி தயாரிப்பில் எடுக்கப்படும் படங்களை இனி திரையரங்குகளில் வெளியிட முடியாது என தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா தேர்ந்தெடுக்கும் அனைத்து படங்களுமே வித்தியாசமான கதை அம்சங்களை கொண்டதாகவே இருக்கும். சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவர இருந்த “சூரரைப் போற்று” திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து சூர்யா ஆறாவது முறையாக இயக்குனர் ஹரியுடன் இணைந்து “அருவா” படத்தில் நடிக்க இருக்கின்றார். பின்னர் இயக்குனர் வெற்றிமாறனுடன் சூர்யா அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படத்தின் பெயர் “வாடிவாசல்” எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2டி தயாரிப்பில் ஜோதிகா நடித்து வெளிவர இருந்த “பொன்மகள் வந்தாள்” திரைப்படம் ஆன்லைனில் வெளிவர இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனை அறிந்த தியேட்டர் நிர்வாகம் 2டி தயாரிப்பில் எடுக்கப்படும் எந்த படமும் இனி திரையரங்குகளில் வெளியிட முடியாது என அறிவித்துள்ளனர். இதன் காரணமாக சுதா கொங்கராவின் சூரரைப்போற்று படத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.