“தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கிடைக்கும் வரை மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்” என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இது குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா தெளிவான விளக்கம் அளித்து விட்டனர். அப்படியிருக்கையில், இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்வதாகக் கூறி திமுக நாடகம் ஆடிக் கொண்டிருப்பதோடு, திமுக தலைவர் ஸ்டாலின் அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளையே பரப்பி வருகிறார்.
தமிழ்நாட்டில் 25 மாவட்டத்தில் உள்ள 107 முகாம்களில் வசித்து வரும் 59 ஆயிரத்து 814 இலங்கை வாழ் மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களுக்கான உரிமைகள் பெற்றுத் தரப்படும். இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டி, ஏற்கெனவே மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்.அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கிடைக்கும்வரை அதிமுக சார்பில் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம்” என்றார்.