காய்கறிகளை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்த தொகுப்பு
சமைக்கும் முன்பு அனைத்து விதமான காய்கறிகளையும் சுத்தமாக கழுவிக் கொள்வது அவசியமான ஒன்று. சுத்தம் செய்யாத காய்கறிகளை சமைப்பது உடல் நிலையை பாதிக்கும் சூழலை ஏற்படுத்தும். காய்கறிகளுக்கு தகுந்தார்போல் அதனை சுத்தம் செய்வதும் அவசியம்.
கீரை வகைகள்
அகன்ற பாத்திரம் ஒன்றில் கீரை மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து சிறிதுநேரம் கீரையை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் வேரில் இருக்கும் மண் அனைத்தும் நீங்கும் அளவிற்கு நன்றாக அலசி சுத்தம் செய்யவேண்டும்.
காளான்
காளானை தண்ணீரில் அலசுவது கடினமான செயல். இருந்தபோதிலும் கொடிய நோய் பரவும் இந்த காலகட்டத்தில் சுத்தம் செய்வது அத்தியாவசியமான ஒன்றாகிறது. எனவே தண்ணீரில் ஒரு அலசு அலசி எடுத்துக் கொள்வது நல்லது.
வேரில் உருவாகும் காய்கறிகள்
உருளைக்கிழங்கு, பீட்ரூட், முள்ளங்கி, கேரட் போன்ற வேரில் உருவாகும் காய்கறிகளை தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்து பின்னர் ஓடும் தண்ணீரில் காட்டியபடியே தோலை சீவி எடுத்து மீண்டும் தண்ணீரில் மூழ்கும் அளவு போடவேண்டும். வெட்டும் வரை தண்ணீரிலேயே அவை இருப்பது நல்லது.
விதைகள் கொண்ட காய்கறி
பீன்ஸ், அவரைக்காய் போன்றவற்றை வெதுவெதுப்பான வெந்நீரில் சுத்தம் செய்வது அவசியமான ஒன்று. அதைப்போன்று பழவகைகளையும் வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்ய வேண்டும்.