உபயோகப்படுத்திய சமையல் எண்ணெய்யை மறுசுழற்சி முறையில் எரிபொருளாக மாற்றும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் உபயோகப்படுத்திய சமையல் எண்ணெய் மறுசுழற்சி முறையில் இயற்கை எரிபொருளாக மாற்றும் திட்டத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளார். அப்போது கலெக்டர் கூறியபோது, சமையல் எண்ணை பயோ டீசலாக மாற்றும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓட்டல்கள், பேக்கரிகள், டீக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் மற்றும் சமையல் எண்ணெய் பயன்படுத்தும் அனைத்து வகையான கடைகளும், தரமான சமையல் எண்ணெய்யை பயன்படுத்தவேண்டும் என்றும் சமையல் எண்ணெய்யை 2 முறைகளுக்கு மேல் சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செய்தால் அதில் நச்சுத்தன்மை உண்டாகி, கெட்ட கொழுப்பு அமிலங்கள் 3% அதிகமாகி தரம் குறைந்து உண்பதற்கு தகுதியற்ற எண்ணெய்யாக மாறிவிடுகின்றது. இதனால் வயிற்றுப்புண், குடல்புற்றுநோய், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் மாரடைப்பு போன்றவை ஏற்படுகின்றது. ஆகவே சமையல் எண்ணெய் மறுசுழற்சிக்காக அதை பாதுகாப்பான முறையில் சேகரித்து இயற்கை எரிபொருளாக பயன்படுத்துவதற்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். எனவே உணவு வணிகர்கள் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தாமல் ஒப்படைக்க வேண்டுமென்றும், பயன்படுத்திய எண்ணெய் சேகரிக்க சென்னை கேர்வேல் எனர்ஜி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட கேன்கள் வணிகர் சங்க பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா பரவிவரும் நிலையில் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம், கையுறை அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் விற்பனை செய்ய வேண்டுமென்றும், உணவு விற்பனையில் ஈடுபடும் வணிகர்கள் அரசு வழங்கும் அறிவுரையின்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் உணவு பாதுகாப்பு குறித்து புகார்கள் 94440-42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சவுமியா சுந்தரி மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.