Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள்… கத்தி முனையில்… நகை மற்றும் பணம் பறிப்பு…!!

அதிகாலையில் வியாபாரி வீட்டில் கத்தி முனையில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தை  சேர்ந்த தம்பதியினர் ஜோதிமணி-சாந்தா. இத்தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.ஜோதிமணி  பழைய மோட்டார் சைக்கிள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென மர்ம நபர்கள் 5 பேர் கொண்ட கும்பல் ஜோதிமணியின் வீட்டுக்கதவை தட்டி உள்ளனர் . அந்த சத்தம் கேட்டு வீட்டின் வராண்டாவில் தூங்கிக்கொண்டிருந்த சாந்தாவின் தந்தை நந்தகோபால் எழுந்து கதவை திறந்துள்ளார்.

அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 5 பேரும் அவரை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். இதில் அவர் அங்கேயே  சுருண்டு விழுந்தார். அதன் பின்னர் அந்த கும்பல் வீட்டின் கதவை உட்புறமாக பூட்டி உள்ளே சென்று நந்தகோபாலின் சத்தம் கேட்டு வந்த  ஜோதிமணியை கத்தியை காட்டி மிரட்டி பீரோ சாவி எங்கு உள்ளது என்று கேட்டுள்ளனர். அவர்களின் சத்தம் கேட்டு ஜோதிமணியின் மனைவி சாந்தா அங்கு வந்துள்ளார். அப்போது  அவரையும் அந்த கும்பல் கத்தி முனையில் மிரட்டியுள்ளது. பின்னர் கொள்ளையர்கள் ஜோதிமணியிடமிருந்து பீரோ சாவியை பிடுங்கியுள்ளனர்.

அதனை தொடர்ந்து வீட்டிலிருந்த 13 பவுன் தங்க  நகை மற்றும் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு குடும்பத்தினரை வீட்டிலிருந்து வெளியே வராத வண்ணம் வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு தப்பியுள்ளனர். இதனால் பதறிப்போன ஜோதிமணி செல்போன் மூலம் தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அவர்கள் விரைந்து வந்து கதவை திறந்து ஜோதிமணி குடும்பத்தினரை மீட்டனர். இது குறித்து ஜோதிமணி  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |