விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தடை விதித்த தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனை கண்டித்து இந்து முன்னணி சார்பாக இரட்டை விநாயகரிடம் மனு கொடுத்து நூதன போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினரான ராமராஜன் தலைமை தாங்கியுள்ளார்.
இதனை அடுத்து மாவட்ட பா.ஜ.க ஊடக பிரிவு தலைவரும் தொழிலதிபருமான ஆர். கார்த்திகேயன், நகர பொறுப்பாளர் மோகன், நிர்வாகி பத்ரிநாராயணன், விஸ்வ இந்து பரிஷித் மூத்த நிர்வாகி ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட இந்து முன்னணியினர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் என விநாயகரிடம் மனு கொடுத்தும் மற்றும் விழாவுக்கு தடை விதித்த தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பி போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.