இஸ்லாமிய மதத்திற்கு எதிராகப் பரவிய காணொலியால் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இஸ்லாமிய மதத்திற்கு எதிராகவும் நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் விதத்திலும் ஒரு காணொலி உருவாக்கப்பட்டு சமூக வலைதளத்தில் பரவி வந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இச்செயலைக் கண்டிக்கும் விதமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் டோடா, ரிச்சி மாவட்டங்களில் கடையடைப்புப் போராட்டத்தை நடத்த மத அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதையடுத்து, அங்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கிஷ்த்வார் பகுதியில் பதட்டத்தை குறைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமே ஊரடங்கு பிறப்பித்துள்ளது. ஸ்ரீநகர், புல்வாமா, குப்வாரா, புட்கம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காணொலியைப் பதிவு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, காவல் துறையினர், சத்பால் சர்மா என்ற மதகுரு உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவித்ததாகக் கூறி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்பால் சர்மாவின் உதவியாளர், அந்தக் காணொலியை எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பி வந்தது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.