கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்முண்டி மோட்டூரை சேர்ந்த தம்பதியினர் யோகானந்தம் – ஜெயப்பிரதா. ஜெயப்பிரதா கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயப்பிரதாவை சிகிச்சைக்காக அவருடைய தம்பி விக்னேஷ் மோட்டார் சைக்கிளில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் . சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் திடீரென விக்னேஷின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஜெயபிரதாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் ஜெயப்பிரதாவையும் அவரது சகோதரரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெயப்பிரதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். விக்னேஷ் லேசான காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். மேலும் விபத்து குறித்து பெங்களூருவை சேர்ந்த கார் ஓட்டுநர் புருஷோத்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.