லாரிகள்-கார், அரசு பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு ஆயில் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை ஆந்திராவை சேர்ந்த டிரைவர் நரசிம்மையா ஓட்டி வந்துள்ளார். இவருடன் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரமணன் மாற்று டிரைவராக உடன் வந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் வழியாக சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி முன்னால் சென்ற கார் மற்றும் அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதனையடுத்து சிறிது நேரத்திலேயே அப்பகுதியில் விறகு ஏற்றிக்கொண்டு வந்த லாரி, டேங்கர் லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் மற்றும் காரில் இருந்த ஈரோடு மாவட்ட பாஜக பிரமுகர் செந்தில்குமார் மற்றும் பேருந்தில் வந்த 10 பேர் உள்பட 17 பேர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 17 பேரையும் உடனடியாக மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் விபத்துக்குள்ளான 2 லாரிகள் மற்றும் கார், பேருந்து ஆகியவற்றை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த தொப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.