டெல்டாப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்ததை விசிக வரவேற்கிறது என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் விசிக கட்சியின் மண்டல செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம், “கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை அமைக்க, தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. அதனால் விளைநிலம் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
விஜய் படப்பிடிப்புத்தளத்தில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். டெல்டாப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்ததை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. அதனை அறிவிப்பாக மட்டுமல்லாமல், தனிச் சட்டம் இயற்றி அதனை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
மேலும் இக்கூட்டத்தில் மண்டலச் செயலாளர் கிட்டு, பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் தமிழ் மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.