சமூகவலைதளத்தின் மூலம் கிடைத்த தகவலின்படி, ஆதரவற்ற நிலையில் இருந்த மூதாட்டி ஒருவருக்கு உதவித்தொகை வழங்கிய மாவட்ட ஆட்சியரை வாணியம்பாடி மக்கள் பாராட்டிவருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அர்பாண்ட குப்பம் கிராமத்தில் வசித்துவருபவர் அம்சா என்ற மூதாட்டி (65). இவர், பிறப்பிலிருந்தே தோல் வியாதியால் மிகவும் பாதிப்படைந்துள்ளார். 65 வயதாகியும் திருமணம் செய்யாமல் தனிமையில் ஒரு குடிசையில் வாழ்ந்துவருகிறார்.
அதுமட்டுமின்றி உணவு மற்றும் உடை என வாழ்வாதாரம் ஏதுமில்லாமல் மோசமான நிலையில் வாழ்க்கையை கடத்தி வந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மோகன் என்பவர் வாட்ஸ் அப் மற்றும் முகநூல் வழியாக இவர் குறித்த தகவலை பதிவிட்டார். இந்த செய்தி திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் வைரலானது.
இந்நிலையில், மூதாட்டி குறித்த தகவல் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் பார்வைக்கு சென்ற ஒரு மணி நேரத்திலேயே உடனடி நடவடிக்கை எடுத்து அவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. அவரது உத்தரவின் படி, வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் மகாலட்சுமி, மூதாட்டி அம்சாவை சந்தித்து உதவித்தொகையை வழங்கினார். மாவட்ட ஆட்சியரின் இந்த செயலைக்கண்ட வாணியம்பாடி பொதுமக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.