காதலித்த பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கந்தையா. இவருடைய மகன் கணேசன்(24).கணேசன் பல்லடம் அருகே உள்ள தனியார் சாய தொழிற்சாலையில் தங்கி ஓட்டுனராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் சொந்த ஊரில் உள்ள தனது உறவுக்கார பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஏற்கனவே இவரது சகோதரனுக்கு அந்தப் பெண்ணுடைய அக்காவை திருமணம் செய்ததால் ஒரே குடும்பத்திலிருந்து பெண் வேண்டாம் என்று கணேசனின் பெற்றோர் கூறியுள்ளனர். ஆனாலும் கணேசன் அந்த பெண்ணை தொடர்ந்து காதலித்து வந்ததோடு தினமும் செல்போன் மூலம் பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி கணேசனை தொடர்பு கொண்ட அவரது பெற்றோர் அந்த பெண் வேண்டாம் என்று உறுதியாக கூறி இவரை கடுமையாக திட்டியுள்ளனர். இதனால் மன வேதனையடைந்த கணேசன் பூச்சி மருந்தை குடித்து விட்டு அவரது அறையில் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த சக தொழிலாளிகள் கணேசனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.