தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஊராட்சி தலைவியின் கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகொம்மேஸ்வரம் பகுதியில் ஊராட்சியின் தலைவியாக ஷோபனா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கோவிந்தராஜ் என்ற கணவர் இருந்துள்ளார். இவர் டி.வி பழுது சரி செய்கின்ற கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தனது கடையில் இருக்கும் டி.விகளை கோவிந்தராஜ் சரி செய்து கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் அவரை திடீரென தாக்கியுள்ளார். அதன்பின் கோவிந்தராஜ் கடையில் இருந்து வெளியேறி அவரிடமிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.
இருப்பினும் அந்த மர்ம நபர் அவரை ஓட, ஓட விரட்டி சென்று தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கொலை செய்யப்பட்டு கிடந்த கோவிந்தராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கோவிந்தராஜை கொலை செய்தவர் யார் எதற்காக இவரை கொலை செய்தார் என்பது தெரியவில்லை. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளியை அடையாளம் கண்டு அவரை கைது செய்ய அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.