பெண்ணின் வலியை புரிந்து கொள்ளாமல் அவளை ஒரு வளர்ப்பு பிராணியாகவே ஆண் வர்க்கம் நடத்துகிறது என்று அமலாபால் சாடியுள்ளார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு மே 3ம் தேதி வரை அமலில் உள்ளது. இதனால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்காரணத்தினால் அனைத்து பிரபலங்களும் வீட்டில் அவர்களுக்கு பிடித்த செயல்களை செய்து குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வருகின்றனர். அதனை சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்து ரசிகர்களுடன் உரையாடியும் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் நடிகை அமலாபால் தற்போது டுவிட்டரில் கூறியது;
திருமணம், குழந்தைகள், காதல் என்று இவ்வாறான கேள்விகள் பெண்களிடம் மட்டுமே ஏன் கேட்கப்படுகிறது. ஆனால் ஆண்களை பார்த்து யாரும் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்டபோது இல்லை. ஒரு பெண் என்பவள் அடிமைத்தனத்தில், அவமானத்தில் உள்ளாள். பொருளாதாரத்திலும், சமூகத்திலும் மற்றவர்களையே சார்ந்து இருக்கிறாள். அதனால்தான் அவளை குழந்தை மட்டும் பெற்று கொடுப்பவளாக பார்க்கிறார்கள்.
பல நூற்றாண்டு காலமாகவே பெண்கள் வலியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவளுக்குள் வளரும் குழந்தை, அவளை சாப்பிட கூட அனுமதிப்பது இல்லை. எப்போதும் வாந்தி எடுப்பது போலவே உணர்கிறாள். வயிற்றில் குழந்தை ஒன்பது மாதம் வளர்ந்ததும் அதை பெற்று எடுப்பது என்பது மரணம் வலியை உணர்வது ஆகும். அவள் ஒருமுறை கர்ப்பமடைந்த பின் அதில் இருந்து மீள்வது கடினம். மீண்டும் அவளை கர்ப்பமடைய செய்ய அவளது கணவன் தயாராக இருக்கிறான். மக்கள் கூட்டத்தை பெருக்கும் தொழிற்சாலை போன்றே இருக்கிறாள்.
ஒரு பெண்ணின் வலியில் எந்த ஒரு ஆணும் பங்கெடுப்பது இல்லை. ஆண்களை பொறுத்தவரை பெண்களை பாலுணர்வை பூர்த்தி செய்யும் ஒரு பொருளாகவே பயன்படுத்துகின்றனர். பெண்ணை உண்மையாக நேசித்து இருந்தால் உலகில் மக்கள் தொகை அதிகரித்து இருக்காது. அவன் சொல்லும் காதல் என்ற வார்த்தை போலி. பெண்ணை ஒரு வளர்ப்பு பிராணியாகவே ஆண் வர்க்கம் நடத்துகிறது. இவ்வாறு அவர் கடும்கோபத்தோடு கூறியுள்ளார்.