பெண்களை ஆபாச படங்கள் எடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்த கும்பலில் ரிசார்ஜ் கடை உரிமையாளர் உட்பட 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் சிறப்பு எண்ணை தொடர்பு கொண்டு அழைத்து பெண் ஒருவர் சிலர் ஆபாச படங்களை வாட்ஸப்பிற்கு அனுப்பி மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார்.. அந்தப் புகாரில், வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் மனைவிகளைக் குறிவைத்து இரு நபர்கள் ஆபாசமாகப் படம் எடுத்து மிரட்டிப் பணம் பறிப்பதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாவட்ட சமூக வலைதளப் பிரிவின் உதவியுடன் கீழக்கரை இன்ஸ்பெக்டர் யமுனா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பெண் ஏர்வாடியில் வசித்து வருவதாவும், கணவரால் கைவிடப்பட்டவர் எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஏர்வாடி பகுதியில் செயல்பட்டுவரும் ‘ஏர்பாத் நெட் கபே’ என்ற செல்போன் ரீசார்ஜ் கடையை பாதுஷா, அவரது சகோதரர் ஹாஜி ஆகிய இருவரும் நடத்திவருவதாக கூறினார்.
மேலும் இந்தக் கடையில் சகாபுதீன் என்பவர் வேலைபார்த்து வருகிறார். அதில் செல்போன் ரீசார்ஜ் மட்டுமின்றி பிறப்பு, இறப்பு, ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசுச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள், வெளிநாட்டு கடவுச்சீட்டு, RTI விண்ணப்பம், லேப்டாப் மற்றும் செல்போன் சர்வீஸ் உள்ளிட்ட பல சேவைகளை செய்து வருவதாகவும் கூறினார்..
ஆனால் இந்த சேவைகள் மட்டுமின்றி சில சட்டவிரோதமான லாட்டரி, சூதாட்டம் உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டுவருவதாக கூறினார். அந்தக் கடையில் பணியாற்றும் சகாபுதீன் என்பவர் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி தன்னை உல்லாசம் அனுபவித்து கொண்டார் என்றும், அவர் கடையின் உரிமையாளரிடம் வாங்கிய ரூ 10 லட்சம் கடனை அடைக்க உதவி செய்யுமாறு கேட்டார் என்றும் அப்பெண் கூறியுள்ளார். அவ்வாறு பணம் கொடுக்கவில்லை என்றால் தன்னுடைய ஆபாச போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்பி விடுவேன் என்றும் சகாபுதீன் மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த விவகாரத்தில் பாதுஷா, ஹாஜி, சகாபுதீன் ஆகியோர் கூட்டாக சேர்ந்தே செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள் அப்பெண்ணின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளிநாட்டில் உள்ள நண்பர் ஆலிம் என்பவருக்கு முதலில் அனுப்பி, அவர் மூலம் தான் ஏர்வாடியில் வாட்சப் மூலம் சில நபர்களுக்கு அப்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்கள் கிடைத்துள்ளது. அதை வைத்து பலரும் அப்பெண்ணிடம் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி மிரட்டியுள்ளனர்..
மேலும் விதவை மற்றும் கணவர் வெளிநாட்டில் இருக்கும் பெண்களை குறிவைத்து, ரீசார்ஜ் செய்யும்போது, அவர்களின் செல்போன்களில் அவர்களுக்கே தெரியாமல் ஹேக்கிங் செய்யும் Any desk என்னும் செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதன்மூலம் அந்த பெண்களின் ஆபாச உரையாடல்கள், கணவருடன் இருக்கும் அந்தரங்க புகைப்படங்களை எடுத்து, அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர் என்பது முழு விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் யமுனா தலைமையிலான காவல்துறையினர் பாதுஷா, சகாபுதீன் ஆகியோரைக் கைதுசெய்து சிறையிலடைத்தனர். தொடர்ந்து அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4 செல்போன்கள் மற்றும் 1 மடிக்கணினி ஆகியவை விசாரணைக்காகத் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படவுள்ளது. மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.