பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல்துறையினர் 2 பேர் பலியாகியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சமீப காலங்களாக பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தொடர்ச்சியாக ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரை குறிவைத்து தாக்குதல்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பயங்கரவாதிகள் சிலர் கைபர் பக்துங்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவர் நகரில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பயங்கரவாதிகள் இருந்த பகுதியை சுற்றிவளைத்து தீவிர தேடலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் காவல்துறையினரை நோக்கி ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதில் 2 காவலர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுள்ளனர். ஆனால் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இந்த தாக்குதலுக்கு உடனடியாக பொறுப்பேற்கவில்லை.