இலங்கைக்கு கடத்த முயன்ற 4.3 டன் மஞ்சள் மற்றும் பிற பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
இலங்கை அரசாங்கம் அவர்கள் நாட்டில் வசிக்கும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளனர். இதனால் அங்கு ஏற்பட்டுள்ள மஞ்சள் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக கடத்தப்படும் மஞ்சளை கடலோர போலீசார் பறிமுதல் செய்வது அடிக்கடி நிகழ்கிறது. இதனால் இந்த கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காக துறைமுக போலீசார் மற்றும் கடலோர போலீசார் கடலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கி. யூ பிரிவு போலீசாருக்கு தூத்துக்குடியிலிருந்து லாரி மூலமாக மஞ்சளை கடத்தி கடல்வழியாக கொண்டு செல்லப்போவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போலீசார் தூத்துக்குடி கோவளம் கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை வழிமறித்த போது, போலீசாருக்கு பயந்து டிரைவர் உட்பட 4 பேர் லாரியிலிருந்து இறங்கி ஓட முயற்சி செய்தனர். ஆனால் அந்த 4 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விட்டனர். அதன் பின் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு மஞ்சள் போன்ற பொருட்களை அவர்கள் கடத்தி சென்றது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அந்த லாரியை அதிகாரிகள் சோதனை செய்ததில், விரலிமஞ்சள் 2.8 டன், மஞ்சள்தூள் 1.5 டன், ஏலக்காய் 125 கிலோ மற்றும் சிகரெட் தாள் 125 பெட்டி என மொத்தம் 4.3 டன் பொருட்கள் கடத்தப்படுவதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனைதொடர்ந்து அவை அனைத்தையும் பறிமுதல் செய்த கி.யூ பிரிவு போலீசார், இந்த கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். மேலும் மஞ்சள் மற்றும் பிற பொருட்களை கடத்திய குற்றத்திற்காக டிரைவர் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.