பெருந்துறை அருகே தாய் மற்றும் மகன் ஆகிய இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தைச் சேர்ந்தவர் 70 வயது ருக்குமணி. இவரது மகன் முத்துச்சாமிக்கு வயது 40 ஆகிறது.. முத்துச்சாமிக்கு திருமணமாகவில்லை.. கணவரை இழந்த ருக்குமணி உடல்நலக்குறைவின் காரணமாக மாத்திரை சாப்பிட்டு வருகிறார். இவரது மகன் முத்துச்சாமி வேலைக்கு செல்லாததோடு மட்டுமில்லாமல், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்.. இதன் காரணமாக திருமணம் செய்யாமல் சொத்துக்களை விற்று அடிக்கடி குடித்து வந்துள்ளார்.
இந்தநிலையில், நேற்று காலை பால் வாங்குவதற்காக ருக்குமணி வீட்டுக்கு வந்த உறவினர்கள், ருக்குமணி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.. இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ருக்குமணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ருக்குமணியின் மகன் முத்துச்சாமியும், அருகிலிருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.
இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் வந்து கிணற்றிலிருந்த முத்துச்சாமியின் சடலத்தை மீட்டனர். மேலும், மதுப்பழக்கம் காரணமாக தாய் மற்றும் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.