பிரித்தானிய இளவரசர் ஹரி அமெரிக்காவிலிருந்து லண்டனுக்கு தாயாரின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்படும் போது விமான நிலையத்தில் அசம்பாவிதம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இளவரசி டயானாவின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி அவருடைய சிலை சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவிருப்பதால் இளவரசர் ஹரி லண்டன் செல்வதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தின் வேலியை உடைத்து கொண்டு கார் ஒன்று வேகமாக விமான நிலையத்திற்குள் புகுந்துள்ளது. அதனைக் கண்ட காவல்துறையினர் 20 கார்களுடன் சென்று விமான ஓடுதளம் ஒன்றின் அருகே அந்த காரை மடக்கி பிடித்துள்ளனர்.
இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த காரினுள் இருந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நல்ல வேளையாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ள காவல்துறையினர் அவர் எதற்காக விமான நிலையத்திற்குள் வேகமாக நுழைந்தார் என்பது குறித்த தகவல் எதுவும் தெரியாத நிலையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.