அயலூர் சந்தையில் வெளிமாநில தக்காளி வரத்து அதிகமானதால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
திண்டுக்கல் வடமதுரை அருகில் உள்ள அய்யலூர் என்னும் பகுதியில் தக்காளிக்கு என தனி சந்தை உள்ளது. இந்த சந்தையில் இருந்து தினமும் வெளி மாவட்டங்களுக்கு தக்காளிகள் பெட்டிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. திருவிழா மற்றும் விழா நாட்களில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 10 டன் வரை தக்காளிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அய்யலூர் வட மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் ஏராளமானோர் தக்காளி சாகுபடி செய்கின்றனர். ஆந்திரா கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும்,தக்காளிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இதனால் அய்யலூர் சந்தை திண்டுக்கல்லில் தக்காளியின் விலையை நிர்ணயிக்கும் முக்கிய சந்தையாக விளங்குகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் அயலூர் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. ஆந்திரா கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. மழை காலங்களில் பொதுவாக தக்காளியின் விலை உயரும், ஆனால் தற்போது வெளிமாநில தக்காளி வரத்து அதிகமானதால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு பெட்டி கடந்த வாரம் ரூபாய் 250 முதல் 300 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு பெட்டி ரூபாய் 100 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.