தமிழக அரசின் காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக போட்டித்தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு கொண்டு வருகிறது. அதன்படி டிஎன்பிஎஸ்சி, தான் நடத்த இருக்கும் குரூப் 1, 2, 2 ஏ, 3,4உள்ளிட்ட அனைத்து விதமான தேர்வுகளிலும் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது.
தமிழ் மொழித் தகுதி தாள் தேர்ச்சி கட்டாயம் என்ற நடைமுறைக்கான புதிய பாடத்திட்டங்கள் மற்றும் மாதிரி வினாத்தாள் விரைவில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி சமீபத்தில் குரூப் 1, குரூப்-2 மற்றும் 2 ஏ உள்ளிட்ட சில பதவிகளுக்கான தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது குரூப்-3, 4, 7- பி, 8 போன்ற பதவிகளுக்கான தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தமிழ் மொழித் தகுதி தாளில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே அதற்கடுத்த ” பி ” பிரிவில் எழுதிய விடைத்தாள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே தேர்வு எழுத தயாராகும் தேர்வர்கள் அந்த பாடத்திட்டத்தை பார்த்து வருகின்ற மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 பதவிக்கான தேர்வை எதிர்கொள்ள தயாராவதற்கு ஏதுவாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.