தொடர் மழை பெய்வதால் மானாவாரி பயிர்கள் நாசமாகியுள்ள நிலையில் உரிய நிவாரணம் கேட்டு விவசாயிகள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில் விவசாயமே மக்களின் முக்கிய தொழிலாக இருக்கிறது. மேலும் இப்பகுதி வானம் பார்த்த பூமியாக உள்ளது. ஓட்டப்பிடாரம் பகுதியில் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் பாசிப்பயிறு, உளுந்து, மிளகாய், மக்காச்சோளம் ஆகியன அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது பாசிப்பயறு, உளுந்து அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், கடந்த 4 நாட்களாக ஓட்டப்பிடாரம் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாசிப்பயிறு, உளுந்து ஆகியவை செடியிலேயே முளைத்து வருகிறது.
கள்ளிக்கோட்டை, மலைப்பட்டி, சங்கம்பட்டி, ஒட்டநத்தம், ஓம். சரவணா புரம், அக்க நாயக்கன்பட்டி, பசுவந்தனை, சில்லாங்குளம், கொல்லம்பருப்பு, எப்போதும்வென்றான், வேடநத்தம், ஆரைக்குளம், கொம்பாடி, குலசேகரநல்லூர், கைலாசபுரம், தளவாய்புரம், மருதன்வாழ்வு, கீழக்கோட்டை, நாரைக்கிணறு ஆகிய கிராமங்களில் பாசிப்பயிறு, உளுந்து முற்றிலுமாக செடிகளிலேயே முளைத்து வருகிறது. மேலும் வெங்காயம், மிளகாய் பயிரிடப்பட்டுள்ள விளை நிலங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வெங்காயம், மிளகாய் செடி ஆகியவை அழுகிய நிலையில் உள்ளது. மக்காச் சோளமும் மழையினால் மிகவும் சேதம் அடைந்து உள்ளது. எனவே ஓட்டப்பிடாரம் பகுதியில் மானாவாரி பயிர்கள் பயிரிடப்படும் அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.