தடையை மீறி கஞ்சா விற்பனை செய்த இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மேலசண்முகபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை கையும், களவுமாக பிடித்துவிட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் செல்வகுமார் மற்றும் மாரியப்பன் என்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல் துறையினர் அவர்கள் 2 பேரும் விற்பனைக்காக வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்ற குற்றத்திற்காக அவர்கள் 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.