திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள் கடத்தி வந்தவர்களிடம் சுங்க துறை அதிகரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளுக்கு விமானம் இயக்குவது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பிரத்யேக விமானங்கள் அனுமதிக்கப்பட்டு இயங்கிவருகின்றன. இந்த விமானங்களில் தங்கம் கடத்தல் அடிக்கடி நடந்து வருகிறது. அந்த வகையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்தது.
விமான நிலைய சுங்க துறை அலுவலர்கள் இதில் வந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது சிவகங்கையை சேர்ந்த பாஸ்கர், மானாமதுரை சேர்ந்த உதயன், ஒரத்தநாட்டில் சேர்ந்த ராஜா மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த நூர் ஆகியோர் தங்க கட்டிகள் மற்றும் தங்க நகைகளை உடலில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் வைத்திருந்த ஒரு கோடி மதிப்புள்ள 1.773 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் அவர்கள் நான்கு பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.