பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்திருக்கின்றது. இந்தக் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெரும்பாலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை புரிந்தனர். இதனையடுத்து அதிகாலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கிருமிநாசினி கொண்டு பக்தர்கள் கைகளை சுத்தம் செய்தபின் கோவிலுக்கு தரிசனம் செய்ய அனுமதித்தனர். அதன்பின் பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரம் பகுதியில் இருந்து மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நடந்து சென்றனர். இந்தக் கோவில் பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருப்பதால் இரவு நேரங்களில் பக்தர்கள் மலைப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து மதியம் 11.30 மணிக்கு வனத்துறை கேட் அடைக்கப்பட்டது. அதன்பின் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பால், பழம், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள் உட்பட 18 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமகாலிங்கம் சுவாமி பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார். இந்தப் பிரதோஷ வழிபாட்டில் தமிழகத்திலிருந்து வந்த பெரும்பாலான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். எனவே பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வைத்திருந்தனர்.