யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள துருசனாம்பாளையம் கிராமத்தில் விவசாயி தொட்ட மாதையன் வசித்து வந்தார். இவருடைய விவசாய தோட்டம் தட்டக்கரை வனப்பகுதியை ஒட்டி இருக்கிறது. இங்கு தொட்ட மாதையன் 4 ஏக்கர் பரப்பளவில் கேழ்வரகு, மக்காச்சோளம் போன்றவை சாகுபடி செய்துள்ளார். இந்த தோட்டத்திற்குள் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் நுழைந்து பயிரை சேதப்படுத்தி வந்தது. இதனால் பயிரை பாதுகாக்க தொட்ட மாதையன் தோட்டத்தில் பரண் அமைத்து அங்கேயே இருந்து காவல் காத்து வந்தார். இந்நிலையில் தொட்ட மாதையன் தோட்டத்தில் காவலில் இருந்தபோது அதிகாலையில் அங்கு நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. இதன் காரணமாக திடுக்கிட்டு எழுந்த தொட்ட மாதையன் பரணில் இருந்து கீழே இறங்கி பார்த்தார்.
அப்போது பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் தொட்ட மாதையனின் முன் யானை வந்து நின்றதை அவர் கவனிக்கவில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து திடீரென்று அந்த யானை தொட்ட மாதையனை துதிக்கையின் மூலம் தூக்கி வீசிவிட்டது. இதில் பலத்த காயமடைந்த தொட்ட மாதையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் அந்த யானை அங்கிருந்து சென்று விட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொட்ட மாதையனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த வனச்சரகர் பழனிச்சாமி, வனவர் ரூபன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதுமட்டுமின்றி வனத்துறையினர் தொட்ட மாதையனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, நிவாரண உதவி வழங்க ஆவன செய்வதாக தெரிவித்தனர். இந்த நிலையில் தொட்ட மாதையனின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த தாசில்தார் விஜயகுமார், ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் பாபு மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உறவினர்கள் கூறியதாவது “பாதிக்கப்பட்ட தொட்ட மாதையனின் குடும்பத்திற்கு வனத்துறையினர் இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும் வனவிலங்குகள் மலைக்கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் அடிக்கடி நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியும், மலைவாழ் மக்களை தாக்கியும் வருகிறது. ஆகவே வனவிலங்குகள் தோட்டத்துக்குள் நுழையாதவாறு அதை சுற்றி உடனே அகழி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர். அதற்கு எம்.எல்.ஏ. கூறியபோது “பாதிக்கப்பட்ட தொட்ட மாதையனின் குடும்பத்திற்கு விரைவில் நிவாரண உதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும். அதுமட்டுமின்றி வனவிலங்குகள் தோட்டத்துக்குள் புகாதவாறு அதை சுற்றி அகழி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட தொட்ட மாதையனின் உறவினர்கள் அவரது உடலை வாங்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.