வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மலை தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடி பகுதியில் தர்மலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 87 வயதுடைய பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பழனியம்மாள் தனது வயலில் வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு மரத்தில் இருந்து தேன் கூடு ஒன்று பழனியம்மாள் வேலை செய்து கொண்டு இருந்த இடத்தின் கீழே விழுந்தது. அந்த தேன் கூட்டிலிருந்து திடீரென ஏராளமான மலைத் தேனீக்கள் வெளியே வந்து பழனியம்மாளை கொட்டி விட்டது.
இதனால் வலி தாங்க முடியாமல் பழனியம்மாள் அலறி சத்தம் போட்டுள்ளார். இந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பழனியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பழனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று பழனியம்மாளின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.