தென்னக ரயில்வேக்கு சொந்தமான பகுதிகளிலும் ரயில்களிலும் பதாகைகள் வைக்க உயர் நீதிமன்ற கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த பிரபாகர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “ரயில் நிலையங்களில் வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகள் போன்றவற்றால் ரயில் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளக்ஸ் போர்டு, பேனர் வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோரின் முன்பு விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள் தென்னக ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க தடை விதித்து உத்தரவிட்டனர்.தொடர்ந்து, ரயில் நிலையங்கள், ரயில் போன்றவை பொதுமக்களின் பயணத்திற்காகவே தவிர சங்கடங்களை உருவாக்குவதற்கு அல்ல என்று கூறினர். மேலும், இந்த உத்தரவுகளை மீறினால், அவர்கள் மீது ரயில்வே நிர்வாகம் குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இந்த உத்தரவை தென்னக ரயில்வே மூன்று வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.