எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இருப்பதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டின் போது பந்தை சிறிய பொருளால் தேய்த்து பளபளப்பாக்க அனுமதியளிப்பது குறித்து ஐ.சி.சி. பரிசீலனை செய்து வருகின்றது..
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது அனைத்து பவுலர்களுமே பந்தை எச்சில் மூலம் நன்கு தேய்த்து பளபளப்பாக்குவது வழக்கம். அப்படி செய்யும் போது பந்து தொடர்ந்து ஸ்விங் அல்லது ரிவர்ஸ் ஸ்விங் ஆக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் பந்தை எச்சிலால் தேய்ப்பதற்கு ஐ.சி.சி. தடை விதிக்க முடிவு செய்திருக்கின்றது. ஏனென்றால் பந்து களத்தில் இருக்கின்ற எல்லா வீரர்களின் கைக்கும் சென்று வரும். ஆகவே பந்து மீது எச்சிலை வைத்து தேய்க்கும் போது அதன் மூலம் மற்ற வீரர்களுக்கு வைரஸ் பரவ வாய்ப்பிருப்பதாக ஐ.சி.சி.யின் மருத்துவ கமிட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது..
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் எல்லாம் வெள்ளை நிற பந்து பிரச்சினை கிடையாது. ஆனால் 5 நாள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிவப்பு நிற பந்தை தொடர்ந்து தேய்த்து பளபளப்பு செய்தால் தான் ஆடுகளத்தில் பிட்ச் ஆனதும் கொஞ்சமாவது நகர்ந்து செல்லும். இல்லையென்றால் பந்து வீச்சாளர்கள் படும் பாடு பெரும் திண்டாட்டம் தான் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் கவலை தெரிவித்திருந்தார்.
இது குறித்து ஐ.சி.சி.யின் நிர்வாக கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் சில நாட்களுக்கு முன் விவாதம் செய்யப்பட்டது. . டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இருவருக்கும் சரிசம போட்டி நிறைந்ததாக இருக்க வேண்டும். பழசான பிறகு பந்தை தேய்க்கவில்லையென்றால் பந்து வீச்சாளர்களால் பேட்ஸ்மேன்களை திணறடிப்பது கடினம்.. பந்து வீச்சாளர்களின் சவால் குறைந்து விடலாம். ஆகவே அம்பயர்களின் மேற்பார்வையின் கீழ் சிறிய செயற்கை பொருளை கொண்டு பந்தை தேய்ப்பதற்கு அனுமதிக்கலாமா? என்பது குறித்து ஐ.சி.சி. பரிசீலனை செய்து கொண்டு வருகிறது.
முன்பெல்லாம் எதையாவது வைத்து கொண்டு பந்தை தேய்த்து பின் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த வீரர் மீது பந்தை சேதப்படுத்தியதன் காரணமாக குற்றம் சாட்டப்பட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இனி வீரர்கள் பந்தை சேதப்படுத்துவதை விதிகளுக்குட்பட்டு அங்கீகரிக்க ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளை பொறுத்தமட்டில் கூக்கபுரா, டியூக்ஸ், எஸ்.ஜி. ஆகிய 3 வகையான பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த 3 பந்துகளுக்கு இடையே சின்ன சின்ன வித்தியாசங்கள் இருப்பதால், அதற்கு ஏற்றவாறு தேய்க்க பயன்படுத்தப்படும் பொருளிலும் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும்.
அடுத்த மாதம் அல்லது ஜூன் மாதம் துவக்கத்தில் ஐ.சி.சி. கமிட்டி முன்னாள் வீரர்களை உள்ளடக்கிய எம்.சி.சி.யின் உலக கிரிக்கெட் கமிட்டியிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த இருக்கின்றது.. அதன் பிறகு தான் பந்தை செயற்கை பொருளை கொண்டு தேய்ப்பதற்கு அனுமதிக்கப்படுமா? என்பது உறுதியாக தெரிய வரும்.