அரிசி கடையில் மூன்று லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசித் தேடி வருகின்றனர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பகுதியில் அயாத்கான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான அரிசி கடையானது மகாதேவ மளிகை பகுதியில் அமைந்துள்ளது. இவர் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வியாபாரம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தி.மு.க கவுன்சிலரான அயாத்கான் இரவு நேரத்தில் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனை அடுத்து மறுநாள் காலை சென்று பார்த்த போது கடையின் மேற்கூரையை பிரித்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து கடையில் இருந்த 3 லட்சம் ரூபாயை திருடிச் சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அயாத்கான் வாலாஜா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் கடையில் மூன்று லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.