விவசாயி வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் விவசாயியான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சந்திரசேகர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து கோவிலில் இரவு நடந்த மேடை நாடகத்தை பார்த்து விட்டு குடும்பத்தினர் மீண்டும் அதிகாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து வெங்கடேசனின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பிறகு உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் ரூபாய் பணம், 2 பவுன் தங்க நகை மற்றும் 500 கிராம் வெள்ளி பொருட்கள் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்நிலையத்தில் வெங்கடேசன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விவசாயி வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.