கட்டிட காண்டிராக்டர் வீட்டில் மர்ம நபர்கள் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் பாக்கியசாமி என்ற கட்டிட காண்டிராக்டர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் தனது மனைவி மற்றும் மகனுடன் தூங்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில் மர்ம நபர்கள் பாக்கியசாமியின் வீட்டின் பின்பக்க காம்பவுண்ட் சுவர் வழியாக ஏறி உள்ளே குதித்துள்ளனர். இதனை அடுத்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். அதன்பிறகு பீரோவில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனை அடுத்து மறுநாள் காலையில் எழுந்த பாக்கியசாமி பீரோவில் இருந்த தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பாக்கியசாமி சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.