வீட்டிற்கு சுண்ணாம்பு பூசி கொண்டிருந்த இளைஞர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பிடில் முத்து தெருவில் அப்பாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆயிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்கள் பிடில் முத்து தெருவில் இருந்து வேறு ஒரு பகுதிக்கு குடியேற முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து ஏற்கனவே குடியிருந்த வீட்டை அதன் உரிமையளாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். எனவே அப்பாஸ் வீட்டை சுத்தம் செய்து சுண்ணாம்பு பூசும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அப்பாஸ் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில்அவருடைய உடல் கருகி பலத்த காயம் அடைந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக அப்பாஸை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அப்பாஸ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.