குடும்ப பிரச்னையை தடுக்க வந்த இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் திம்மூர் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்துவரும் பாலமுருகன் என்பவரின் தங்கையை காதலித்து பெண் வீட்டார் சம்மதமில்லாமல் திருமணம் செய்துள்ளார். இதனால் பாலமுருகன் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.. இந்தநிலையில் நேற்று இரவு பாலமுருகன், வெங்கடேசனுடன் தகராறில் ஈடுபட்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளார்..
இந்த மோதலின்போது அதே ஊரைச் சேர்ந்த செல்வக்குமார் என்ற இளைஞர் சண்டையை தடுத்து இருவரையும் விலக்கிவிட முயன்றுள்ளார்.. இதனால் கோபமடைந்த பாலமுருகன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செல்வக்குமாரை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதையடுத்து சம்பவம் குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்னம் போலீசார் செல்வக் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத்தொடர்ந்து செல்வக்குமாரை கொலை செய்த பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சண்டையை விலக்கிவிட முயன்ற இளைஞர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை யும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.