Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இன்று முதல் இலவச பேருந்து சேவை… மக்களுக்கு உதவும் தனியார் SSRBS நிறுவனம்…!!

 ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கோவில்பட்டியில் 7 பேருந்துகளை இலவசமாக தனியார் பேருந்து நிறுவனம் (SSRBS) இயக்கி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எஸ். எஸ். ஆர். பி.எஸ். என்ற தனியார் பேருந்து போக்குவரத்து நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலி, கழுகுமலை, சங்கரன்கோவில், புளியங்குடி, தென்காசி உள்ளிட்ட  பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி வருகின்றது.

இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் வகையில், இன்று முதல் ‘லாக் டவுன்’ காலம் முடியும் வரை தங்களது பேருந்தில் பயணிக்கும் மக்களுக்கு இலவசமாக போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் பாராட்டையும், பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இதுகுறித்து பேருந்து நிறுவன உரிமையாளர் ஸ்ரீதர் கூறுகையில், “கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் நலிந்த நிலையில் மக்கள் உள்ளனர்.. ஆகவே மக்களுக்கு உதவி செய்யும்  வகையில் அவர்களது பொருளாதார சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். இன்று முதல் எங்களது நிறுவனத்தின் பேருந்துகள் மூலம் கழுகுமலை, சங்கரன்கோவில், புளியங்குடி, தென்காசி உள்ளிட்ட வழித்தடங்களில் இலவசமாக போக்குவரத்து சேவையை தொடங்கியுள்ளோம். இதன்மூலம்  ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டாலும், மக்களுக்காக இந்த உதவியை மன நிறைவுடன் செய்கிறோம்” என்று கூறினார்..

Categories

Tech |