இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரானா வைரஸ் உலக அளவில் நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து கதிகலங்க செய்து வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி மக்களை பயம் காட்டி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834ல் இருந்து 873ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 826 பேர் இந்தியர்கள், 47 பேர் வெளிநாட்டினர் ஆவர். அதேபோல பலியானோரின் எண்ணிக்கை 18 ல் இருந்து 19 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 180 பேரும், கேரளாவில் 173பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், 79 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் கூறியுள்ளது.