கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் சீனாவையும் தாண்டியது ஸ்பெயின்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே கொலை நடுங்கச் செய்து வருகிறது. 195க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸை ஒழிக்க பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
உலகளவில் கொரோனா வைரசால் உலகளவில் 19, 100 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 4,28,193 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயம் 1,09,241 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இத்தாலி, ஸ்பெயின், ஈரான், அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது.
சீனாவை விட இத்தாலி பலி எண்ணிக்கையில் முந்தி சென்று விட்டது. இந்த நிலையில் ஸ்பெயினும் சீனாவை தாண்டி விட்டது. ஆம், ஸ்பெயினில் இன்று ஒரே நாளில் 443 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 3, 434 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஸ்பெயினில் ஒரே நாளில் மட்டும் 5,552 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அதன் எண்ணிக்கையும் 47, 610 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் இதுவரையில் 3,281 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.