இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,974ல் இருந்து 31,332 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் கொரோனா இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் எண்ணிக்கை 937ல் இருந்து 1,007 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 400, குஜராத்தில் 181, மத்திய பிரதேசத்தில் 120, டெல்லியில் 54 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதேபோல பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,027-லிருந்து 7,696 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 35வது நாளாக அமலில் உள்ளது.
ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 9,318 பேரும், குஜராத்தில் 3,744 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து டெல்லியில் 3,314 பேரும், ராஜஸ்தானில் 2,364 பேரும் மத்திய பிரதேசத்தில் 2,387 பேரும், தமிழகத்தில் 2,058 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,053 பேருக்கும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மே 3ம் தேதியோடு 2ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கடந்த 27ம் தேதி நடைபெற்ற மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். இந்த நிலையில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணமாகவே இருப்பதால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.