தாய்க்கு நேர்ந்த தவறான கொரோனா பரிசோதனை முடிவுக்குப் பின், பிறந்து 6 நாள்களே ஆன குழந்தை குடலில் தொற்று ஏற்பட்டு, சுவாசிக்க முடியாமல் மருத்துவமனையில் பலியான சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் தாவன்கரே மாவட்டம், சிகாடேரி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.. முன்னதாக அந்த கர்ப்பிணி ஒரு தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்தார். பின்னர் அந்த கர்ப்பிணிக்கு சுகப்பிரசவத்தில் ஒரு குழந்தை பிறந்தது.. அப்போது, பரிசோதனையின் முடிவில் கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன்காரணமாக டாக்டர்கள் குழந்தையைத் தாயிடம் கொடுக்காமல், ஐசியுவிற்கு மாற்றினர். இதையடுத்து, அந்தப் பெண்ணிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தனர்.. ஏனென்றால் அந்தப் பெண் எந்த ஒரு கட்டுப்பாட்டு மண்டலத்தையும் சேர்ந்தவரல்ல.. அதேபோல் கொரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலும் அவர் இல்லை. இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.
இது குறித்து தாவன்கேர் காவல் துறை துணை ஆணையர் மகாந்தேஷ் பிலகி, தனியார் ஆய்வகத்திற்கு ஒரு சிபாரிசு கடிதம் ஒன்றை எழுதினார்.. இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, கடுமையான சுவாசப் பிரச்னையால் பிறந்து 6 நாட்களே ஆன குழந்தை பரிதாபமாக இறந்தது.
இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை கூறுகையில், “தவறான கொரோனா பரிசோதனை முடிவின் காரணமாக தாய் குழந்தையைக் கூட பார்க்க முடியவில்லை.. குழந்தையின் குடலில் தொற்று ஏற்பட்டு, கடுமையான சுவாசப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளது. குழந்தையின் உடலை ஒரு நாள் போராட்டத்திற்கு பிறகே கையில் பெற்றோம்” என வேதனையுடன் கூறினார்.